அமரர் திரு. ஐயா
தாணுலிங்க நாடார்

அமரர் திரு. ஐயா தாணுலிங்க நாடார் - முதல் மாநிலத் தலைவர்

சித்திரகுப்தன் என் ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிறான் ஆகவே இளைஞர்களே இந்த பண்பாட்டினையும் தேசத்தையும் காக்க வாருங்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே 1988 ல் ஏரலில் நடைபெற்ற RSS தலைவரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட இந்துமுன்னணி மேடையிலேயே உயிர் நீத்தவர் இந்து முன்னணியின் முதல் மாநில தலைவர் ஐயா தாணுலிங்க நாடார்.

1915 ல் குமரி மாவட்டம் பொற்றையடி ஊரில் பிறந்தவர். தேசபக்தர், இந்து உணர்வாளர் அதன் காரணமாக அன்றைய கேரள இந்துமிஷனின் துணைத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராணுவம்,வக்கீல் , ஆசிரியர் என்று பல பணிகளில் இருந்தவர்.

பிரிக்கப்படாத கேரள எல்லைகளுக்கு 1948 ல் திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1951ல் தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரஸ் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.பதவி காலம் முடியும் நேரம் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர்.அடுத்து ராஜ்சபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். 1971ல் கன்னியாகுமரி காங்கிரஸ்ஸில் இருந்த கிருஸ்த்துவ மத வெறியை கண்டித்து காங்கிரஸ்ஸை விட்டு வெளியேறினார். 1982ல் நடந்த மண்டைகாடு கலவரத்தில் மீண்டும் எழுந்து நின்றார் தாணுலிங்க நாடார் . கலவரத்தில் போலீஸ் தரப்பு கிருஸ்த்துவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அன்றைய முதல்வர் எம்ஜிஆர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் சடாரென எழுந்த தாணுலிங்க நாடார், "உங்களாலும் உங்கள் காவல்துறையாலும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதென்றால்? நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் இந்துக்களுக்கு தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியும்" என காட்டமாக சொன்னார். அதிர்ந்து போனது அமைதிப் பேச்சுவார்த்தை. இதை எம்ஜிஆர் சட்டமன்றத்திலேயே பதிய வைத்துள்ளார். அதன் பின் திரு.இராம.கோபாலன்ஜீ அவர்களோடு இணைந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் பணியை தொடர்ந்தார் தாணுலிங்க நாடார். 65 வயதில் கோபால் ஜியோடு சைக்கிளிலும், நடைபயணமாகவும் கிராமம் கிராமமாக சென்று இந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்துமுன்னாணி பேரியக்கத்தை காலுன்ற செய்தார்.

144 தடையை மீறி இந்து முன்னணி நாகர்கோவலில் சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டி தடையை மீறி இந்து எழுச்சி மாநாடு நடத்தினார். இதற்காக பல நாட்களாக இராம. கோபாலன் ஜி யோடு சேர்ந்து குமரி மாவட்டத்தில் வீதிவீதியாக ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மக்களை திரட்டினார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து இந்து எழுச்சியை உண்டு செய்த புரட்சி வீரர்.அவரது களப்பணி அளவிட முடியாத கைங்கர்யம் இந்து சமூகத்திற்கு.எந்த ஆடம்பரமும் இல்லாமல் பாதுகாப்பு வளையம் இல்லாமலும் மக்களை சந்தித்து உரையாடியவர். நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் – ன் விஜயதசமி விழாவில் பேசினார். மும்பை கூட்டத்தில் கலந்து கொண்டு பால்தாக்கரேவிடம் , 'நாம் இந்தியத் தாயின் புதல்வர்கள், சகோதர்கள் எனவே தேசத்தை பிளவு செய்யும் சக்திகளுக்கு எதிராக இருக்க வேண்டுமே அல்லாமல் சகோதரர்களுக்குள் அல்ல' என்று அவரது தமிழர் விரோத போக்கை சுட்டிக் காண்பித்தார்.

அதன் பிறகு பால்தாக்கரேவின் அரசியல் தன்னளவில் மாற்றம் பெற்றதை பார்க்க முடிகிறது. இவர் கூட்டங்களில் பேசும் குட்டிக் கதை வெகு பிரபல்யம் அனேகமாக தமிழகத்தின் அரசியல் குட்டிக் கதை பேச்சிற்கு துவக்கமே இவராகத்தான் இருக்க வேண்டும். தொட்டியில் உள்ள நீரில் முழுகும் நிலை வந்தால் தாய் குரங்கு தன் குட்டிக் குரங்கின் தலையை நீரில் அழுத்தி தொட்டியின் விளிம்பை தவ்வி பிடித்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால் காட்டில் தாய்ப்பசு புலியோடு சண்டையிட்டு இறந்தாலும் பரவாயில்லை தன் கன்றை காக்கும் எனவே இந்துக்கள் தாய்ப்பசுவாக இருக்க வேண்டுமே அல்லாமல் ஒருபோது தாய்க் குரங்காக ஆகிவிடக் கூடாது என்று சொன்னார்.

ஒரு பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டு தன் வாலை இழந்த ஒரு நரி தன் சகாக்களின் கேலியில் இருந்து தப்பிக்க திடிரென்று வானத்தில் தேவர்கள் தெரிகிறார்கள்,ரம்பா ஊர்வசி எல்லாம் ஆடுகிறார்கள் என்று பொய் சொல்ல ஆரப்பித்தது. எங்களுக்கு ஏன் தெரியவில்லை என்ற போது வால் அறுந்தால்தான் கண்ணுக்கு தெரியும் என்றதாம்.உடனே மற்ற நரிகளும் வாலை அறுத்துக் கொண்டு எங்கே தெரியவில்லை என்று மீண்டும் கேட்ட போது மெதுவாக சொன்னது முதல் வாலறுந்த நரி,"கேலியில் இருந்து தப்பிக்கவே பொய் சொன்னேன் நீயும் அப்படியே தப்பிக்க இந்த பொய்யை சொல்" என்றதாம். வாலறுந்த நரி கதை போல பல கதைகளை சொல்லி மதமாற்றம்,இந்து ஒற்றுமை,தேசபக்தி என எல்லாவற்றையும் எளிமையாக மக்களிடம் சொல்லி புரிய வைத்தவர். மிகச்சிறந்த தேசபக்தரும்,இந்து ஒற்றுமைக்காக களப்பணியில் தீவிரமாக செயல்பட்டவர்.